கருணாநிதியின் முழுமையான அரசியல் வாரிசு ஸ்டாலின்- திருமாவளவன்
அரசியலில் உழைப்பால் தற்போதைய இடத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்துள்ளார் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கருணாநிதி விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுக்கும் ஆற்றல் வாய்ந்த தலைவர் ஸ்டாலின் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
அரசியலில் உழைப்பால் தற்போதைய இடத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்துள்ளார் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் முரசொலி என்பது ஏடல்ல, ஒரு இயக்கம் எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
முரசொலி பவளவிழா பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வன்முறையின்றி உயரவேண்டும் என்று விரும்பியவர் கருணாநிதி.
கட்சித் தலைவரை பார்த்து நேர் வகிடு எடுத்தவன் திமுக தொண்டன். கட்சித் தலைவரை பார்த்து சொந்த குரலை விட்ட தொண்டன் திமுக தொண்டன். உடன்பிறப்பே என்ற ஒற்றைச் சொல்லில் லட்சக்கணக்கானோரை கட்டிப் போடுகிற தலைவர் கருணாநிதி. உடன்பிறப்பே என கருணாநிதி அழைப்பாரா என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் லட்சம் தொண்டர்கள்.

கருணாநிதி முழக்கம்
தேசிய கொடியேற்றும் உரிமை மாநில முதல்வர்களுக்கு உண்டு என முழங்கியவர் கருணாநிதி. ஆட்சியில் இல்லாத காலத்தில் முரசொலியை வைத்து 13 ஆண்டுகாலம் கட்டி காத்தவர் கருணாநிதி.

அசைக்க முடியாது
அதிமுகவைப் போல திமுகவும் ஒழியப் போகிறது என சில பேர் மனப்பால் குடிக்கிறார்கள். அதிமுக வேண்டுமானால் இல்லாமல் போகலாம்... அங்கே ஆற்றல்மிக்க தலைமை இல்லை. திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதற்காகவே ஸ்டாலினுக்கு காலம் தாழ்த்தியிருக்கிறது.

அரசியல் வாரிசு
பிறப்பால் வருபவர் அரசியல் வாரிசு அல்ல உழைப்பால் வருபவரே அரசியல் வாரிசு. கருணாநிதியின் முழுமையான அரசியல் வாரிசாக செயல்படுகிறார். குடும்ப வாரிசு என்பது பிறப்பால் வருவது அரசியல் வாரிசு என்பது உழைப்பால் வருவது. கருணாநிதி சட்டசபை வைரவிழா, முரசொலி பவளவிழா மூலம் அரசியல் வாரிசாக செயல்படுகிறார்.

முரசொலி பவளவிழா
அண்ணா, பெரியார் கருத்துகளை அடைகாத்து வருகிறார் கருணாநிதி. கருணாநிதி விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுக்கும் ஆற்றல் வாய்ந்த தலைவர் ஸ்டாலின். சட்டசபை வைரவிழாவில் அனைத்திந்திய தலைவர்கள் பங்கேற்றனர். முரசொலி பவளவிழாவில் தமிழக அனைத்து கட்சிகள், ஜனநாயக கட்சிகள் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கருணாநிதியின் அரசியல் வாரிசு ஸ்டாலின் என்பதை நிரூபிக்கின்றன வைரவிழா, பவள விழாக்கள்.

தலைமை பண்பு
இந்த இயக்கத்தை எந்த கொம்பானாலும் அசைக்க முடியாது என்பதை உணர்ததவே ஒன்று கூடியிருக்கிறோம். தம் உழைப்பால் உயர்ந்தவர் ஸ்டாலின். பெரியார் இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. அதேபோல அண்ணாவிற்குப் பின்னர் கருணாநிதி தலைமையேற்று நடத்தி வரும் இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது.

ஸ்டாலினுக்கு வலிமை
கருணாநிதிக்கு பின்னர் திமுகவை இன்னும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துச்செல்லும் வலிமை உங்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது என்று கூறி அமர்ந்தார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications