பெரும்பான்மை உள்ளது என்றால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தாதது ஏன்? திருமாவளவன்
தங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ளபோது ஆளுங்கட்சித் தரப்பில் இரகசிய வாக்கெடுப்புக்கு அஞ்சுவது ஏனென்ற கேள்வி எழுகிறது என திருமாவளவன்க கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஆளும்கட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்றால் ரகசிய வாக்கெடுப்புக்கு அஞ்சுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சட்டபேரவையில் இன்று நடந்தேறியுள்ள விரும்பத் தகாத நிகழ்வுகள் யாவும் சனநாயகத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளது. சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மூன்றாவது முறையாக அவை கூடும்போது, எதிர்க்கட்சித்தலைவர் உட்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
திமுக உறுப்பினர்களால் பேரவைத் தலைவருக்கும் அவைக் காவலர்களால் எதிர்க்கட்சித் தலைவருக்கும் சட்டைகள் கிழியும்நிலை ஏற்பட்டுள்ளது. வேதனைக்குரிய இந்த அவலத்தை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
இவையாவும் இரகசிய வாக்கெடுப்புக்கு பேரவைத் தலைவர் உடன்படாததால் விளந்தவையே ஆகும். தங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ளபோது ஆளுங்கட்சித் தரப்பில் இரகசிய வாக்கெடுப்புக்கு அஞ்சுவது ஏனென்ற கேள்வி எழுகிறது.
சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு இரகசிய வாக்கெடுப்பு முறை தானே ஏதுவாக இருக்க முடியும்? அதனை அனுமதிக்காமல், எதிர்க்கட்சியான திமுகவை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய நடவடிக்கை சனநாயகத்திற்கு எதிரான போக்காகும்.
இவ்வாறான களேபரங்களுக்கிடையில் நடந்தேறிய நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய முதல்வர் எடப்பாடி பழநிச்சாமி வெற்றி பெற்றிருக்கிறார். எனினும், மேதகு ஆளுநரால் இந்த வெற்றி ஏற்கப்படுமா? சட்டப்படி இது செல்லுமா என்பதெல்லாம் கேள்விக்குறியே ஆகும்'' இவ்வாறு திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications