மல்யுத்த வீரர்கள் போராட்டம்! காமப்பித்து பிரிஜ் பூஷண் சரண் சிங்கை பாதுகாக்காதே.. திருமாவளவன் ட்வீட்
சென்னை: மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கான நீதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக அமைச்சருமான பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர்கள் பேரணியாக புதிய நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திய பகுதியையும் அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து மல்யுத்த வீரர்களுக்கு ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாது என டெல்லி போலீஸார் நேற்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தேசிய சர்வதேச போட்டிகளில் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நீரில் வீச போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்.

அப்போது அவர்களை விவசாயிகள் தடுத்து நிறுத்தி பதக்கங்களை பெற்றுக் கொண்டனர். போலீஸாரும் அந்த இடத்திற்கு வந்த நிலையில் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாட்கள் கெடு விதித்தனர். இல்லாவிட்டால் மீண்டும் ஹரித்வார் வந்து தங்கள் பதக்கங்களை கங்கை நீரில் வீசுவோம் என எச்சரித்தனர்.
இந்த நிலையில் நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: காமப்பித்து வன்கொடுமைகளைச் செய்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சரண்சிங் -ஐ கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களின் உறுதிமிக்க அறப்போர் வெல்லட்டும். மோடி அரசே, நீதியைக் கொல்லாதே! குற்றஞ்சாட்டப்படும் நபரைப் பாதுகாத்திட முயற்சிக்காதே!" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications