மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் இணையவில்லை.. கூட்டணிதான் வைத்துள்ளோம்: திருமா விளக்கம்
சென்னை: தலித் முதல்வர் கோஷத்தை முன்வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது கொள்கையை தளர்த்திக்கொண்டுள்ளது. விஜயகாந்த்தான் முதல்வராவார், வரும் 23ம் தேதி ஜார்ஜ் கோட்டையில் பதவியேற்பார் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
தேமுதிக மற்றும் மக்கள் நல கூட்டணி இடையே தேர்தல் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதையடுத்து செய்தியாளர்களுக்கு தலைவர்கள் ஒன்றாக பேட்டியளித்தனர். அப்போது திருமாவளவன் கூறியதாவது:

விஜயகாந்த் தன்னை கிங்காக பார்க்க தொண்டர்கள் ஆசைப்படுவதாக அறிவித்தார். இதன்மூலம், அப்போதே திமுக கூட்டணியில் விஜயகாந்த் சேர மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது.
விஜயகாந்த் தனது தலைமையிலான கூட்டணியில் பிற கட்சிகள் இணைய வேண்டும் என்று கூறியிருந்தார். இப்போதும் அதுதான் நடந்துள்ளது. மக்கள் நல கூட்டணி, விஜயகாந்த்தின் தேமுதிகவோடு தொகுதி பங்கீட்டை செய்துள்ளது. அதாவது மக்கள் நல கூட்டணியும், தேமுதிகவும் தேர்தல் கூட்டணியை வைத்துள்ளனர்.
1967ல் அண்ணா தலைமையில் திமுக, அதுவரை கோலோச்சிய காங்கிரசை வீழ்த்தி ஆட்சி அமைத்தது. இதன்பிறகு அரை நூற்றாண்டுகள் காலமாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும்தான், மாற்றி, மாற்றி தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது.
அரை நூற்றாண்டு காலவரலாற்றை இந்த கூட்டணி திருப்பி போட உள்ளது. வரும் மே 23ம் தேதி ஜார்ஜ் கோட்டையில் விஜயகாந்த் முதல்வராக பதவிக்கு வருவார். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications