கஷ்டம் எனக்கும்தான்.. செல்லாத நோட்டுகளை வங்கிக்கு சென்று மாற்றிய திருமாவளவன்
செல்லாத பழைய நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய 2000 ரூபாய் நோட்டை திருமாவளவன் பெற்றுக் கொண்டார்.
சென்னை: தன்னிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி, புதிய 2000 ரூபாய் நோட்டை பெற்றுக் கொண்டார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன்.
கடந்த ஒரு வாரமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர். தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கால் கடுக்க மக்கள் வங்கி வாசலில் நின்று வருகின்றனர். ஏடிஎம் மையங்களும் சரிவர திறக்கப்படாததால் திறக்கப்பட்டுள்ள சில மையங்களின் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் பணம் எடுக்க காத்துக்கிடக்கின்றனர். இதனால், அன்றாடம் செலவு செய்வதற்கே மக்களிடம் சில்லறை நோட்டுகள் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளானார்.

மத்திய அரசு இந்த அறிவிப்பை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக விமர்சித்தார். மேலும், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது முதல் ஏழை, எளிய மக்கள் சொல்லொணாத் துன்பத்துக்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த சர்வாதிகார அறிவிப்பால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தொடர்ந்து திருமாவளவன் பேசி வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை அசோக் நகரில் உள்ள வங்கி ஒன்றுக்கு திருமாவளவன் நேரில் சென்றார். அங்கு தன்னிடம் இருந்த பழைய செல்லாத நோட்டுகளை கொடுத்து, புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டார்.
மேலும், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பொதுமக்களை இன்னலுக்கு ஆளாக்கிய ரிசர்வ் வங்கி கவர்னர் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாளை 10 மணியளவில் போராட்டம் நடத்த உள்ளது.












Click it and Unblock the Notifications