ஒரு திடமான முடிவோடுதான் இருக்கிறார் போல திருநாவுக்கரசர்.. மீண்டும் அப்பல்லோ விசிட்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் தமாகாவை சேர்த்துக் கொண்டு காங்கிரஸை கழற்றிவிட திமுக முயன்றது. ஆனால் கருணாநிதியின் முயற்சியால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தது.
இருந்தபோதும் உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீட்டில் காங்கிரஸை பதம் பார்த்தது திமுகவின் ஸ்டாலின் தரப்பு. மிகச் சொற்ப இடங்கள்தான் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் கடும் அதிருப்தியில் காங்கிரஸ் இருந்து வந்தது.

ஜெ.வுக்கு ராகுல் ஆதரவு
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை பயன்படுத்தி தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சிப்பதாக கூறப்பட்டது. இதற்கு செக் வைக்கும் வகையில் சென்னைக்கு வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஜெயலலிதாவுக்கு 'ஆதரவு' தருகிறோம் என்றார்.

திமுகவுக்கு எதிர்ப்பு
அத்துடன் கடந்த சில வாரங்களாக திமுக எந்த கோரிக்கையை முன்வைத்தாலும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் அதனை எதிர்ப்பதையே குறிக்கோளாக இருந்து வருகிறார். ராகுல் காந்தியுடன் அப்பல்லோவுக்கு போயிருந்தார் திருநாவுக்கரசர்.

மீண்டும் அப்பல்லோ விசிட்
இந்த நிலையில் இன்று புதுவை முதல்வர் நாராயணசாமியை அழைத்துக் கொண்டு மீண்டும் அப்பல்லோவுக்கு வருகை தந்தார் திருநாவுக்கரசர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவுக்கு ஆதரவாகவே கருத்துகளை வெளியிட்டிருந்தார். பொறுப்பு முதல்வர் தேவை என்ற ஸ்டாலினின் கோரிக்கையையும் நிராகரித்திருந்தார்.

ஆச்சரியத்தில் அதிமுக
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறு கட்சித் தலைவர்கள் கூட இப்படி அப்பல்லோவுக்கு அடிக்கடி வந்தது இல்லை... ஆனால் திருநாவுக்கரசர் தொடர்ந்து அப்பல்லோவுக்கு வருகை தருவது அதிமுகவினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் அரங்கத்திலும் ஒரு புதிய புயலுக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications