அக்கப்போர் ஆரம்பம்... டெல்லியில் திருநாவுக்கரசர், இளங்கோவன் முகாம்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்திருப்பதால் திருநாவுக்கரசர் மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசரை நியமிக்க தொடக்கம் முதலே இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதை கண்டுகொள்ளாமல் திருநாவுக்கரசை தலைவராக நியமித்தது காங்கிரஸ் மேலிடம்.
உடனேயே இளங்கோவனால் நீக்கப்பட்ட நிர்வாகிகளை திருநாவுக்கரசர் மீண்டும் உரிய பதவிகளில் நியமித்தார். இது முதல் சர்ச்சையாக வெடித்தது.

திருச்சி உண்ணாவிரதம்
இதனைத் தொடர்ந்து காவிரி பிரச்சனைக்காக திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இளங்கோவன் புறக்கணிப்பு
ஆனால் இளங்கோவன் பங்கேற்கவில்லை. அன்றைய தினம் சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்றுவிட்டார்.

ராகுலுடன் சந்திப்பு
இதனிடையே நேற்று டெல்லி சென்ற திருநாவுக்கரசர், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது இளங்கோவனின் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தியிடம் திருநாவுக்கரசர் கூறியதாக கூறப்படுகிறது.

புதிய பொறுப்பு?
அதே நேரத்தில் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் எந்த ஒரு பொறுப்பும் வழங்காமல் இருப்பது குறித்து முறையிடுவதற்காக இளங்கோவன் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அலைகள் ஓய்வதில்லைதான்!












Click it and Unblock the Notifications