மருத்துவமனையிலும் அதிசயங்களை நிகழ்த்துகிறார் கருணாநிதி.. திருநாவுக்கரசர்
திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையிலும் அதிசயங்களை நிகழ்த்துகிறார் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை: கருணாநிதி வாழ்க்கையில் பல போராட்டங்களை நடத்தி அதிசயங்களை நிகழ்த்தியவர். இங்கே மருத்துவமனையிலேயேயும் அவர் அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அவர் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 27 ஆம் தேதி இரவு திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் கோபாலபுரம் இல்லத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டார். அங்கே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரமும் அவருடைய உடல் நிலை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, நேற்று இரவு கருணாநிதியின் உடல் நிலையில் சிறிது நேரம் பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் சீரடைந்தது. இதனால், காவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் ஆயிரக் கணக்கில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.
இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"கருணாநிதி மிகுந்த நலம் பெற்றுவருகிறார். அவருடைய உடல் நிலை சீராக உள்ளது. அவரது உடல் நலம் தேறியிருக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கருணாநிதி கடந்த 80 ஆண்டு கால வாழ்க்கையில் பல போராட்டங்களை நடத்தி அதிசயங்களை நிகழ்த்தியவர். இங்கே மருத்துவமனையிலேயேயும் அவர் அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
அதிசயிக்கத்தக்க வகையில், ஆச்சரியப்படத்தக்க வகையில் கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. மேலும் அவர் பூரண நலம் பெறவும் இல்லம் திரும்பவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, செல்வி உள்ளிட்டவர்களிடம் கருணாநிதியின் உடல் நிலை குறித்து பேசினேன்." என்று கூறினார்.