இந்த அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க கால்கடுக்க காத்திருக்கும் பெற்றோர்: நம்புங்க!
நெல்லை: கல்லணையில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளை சேர்க்க பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வழக்கமாக சில முன்னணி தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு அரசு பள்ளியில் மாணவிகளை சேர்க்க பெற்றோர் அதிகாலையிலேயே பள்ளிக்கு வந்து வரிசையில் நிற்பதை தற்போது தான் பார்க்கிறோம்.
இந்த அதிசயம் நடந்தது நெல்லை டவுனில் உள்ள கல்லணை அரசு பள்ளியில் தான்.
6ம் வகுப்பு
கல்லணை அரசு பள்ளியில் 6ம் வகுப்பில் மட்டுமே 13 பிரிவுகள் உள்ளது. அந்த வகுப்புகளுக்கான சேர்க்கை நேற்று முன்தினம் துவங்கியது. இதையடுத்து பெற்றோர்கள் அதிகாலையிலேயே வந்து பள்ளியில் காத்துக் கிடந்தனர்.
சிபாரிசு கடிதம்
அந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க சில பெற்றோர்கள் அரசு உயர் அதிகாரிகள், எம்.எல்.ஏ., கவுன்சிலர் உள்ளிட்டோரிடம் இருந்து சிபாரிசு கடிதங்களை வாங்கி வந்திருந்தனர். பள்ளி நிர்வாகமோ தேர்வு நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவிகளை மட்டுமே சேர்த்துக் கொள்கிறது.
அப்படி என்ன ஸ்பெஷல்?
இப்படி பெற்றோர்கள் போட்டி போடும் அளவுக்கு அந்த பள்ளியில் என்ன பெரிதாக ஸ்பெஷல் என்று கேட்டால் இருக்கு என்பது தான் பதில். அந்த பள்ளியில் படிக்கும்
மாணவிகள் கடந்த சில ஆண்டுகளாகவே எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் ரேங்க் வாங்குகிறார்கள்.
ரேங்க்
கடந்த 2010ம் ஆண்டு கல்லணைப் பள்ளி மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடத்தை பிடித்தார். இந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்தல் அந்த பள்ளிக்கு மாவட்ட அளவில் மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் அந்த பள்ளி மாணவி முருகப்பிரியா 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
அது தான்
கல்லணை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நன்றாக படிக்கும் மாணவிகளை ஊக்குவிப்பதுடன் படிக்க சிரமப்படும் மாணவிகளையும் தேற்றி நல்ல மதிப்பெண்கள் வாங்க வைத்துவிடுகிறார்கள். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அந்த பள்ளி மாணவிகள் சாதனை செய்வதால் தான் அதற்கு அப்படி ஒரு மவுசு.