ஜெயலலிதா பெயருக்கு களங்கம் உருவாக்கும் ஆட்சியாக உள்ளது.. கருணாஸ் சரமாரி குற்றச்சாட்டு
ஜெயலலிதா பெயருக்கு களங்கம் உருவாக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது எம்எல்ஏவான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா பெயருக்கு களங்கம் உருவாக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது அதிமுக ஆதரவு எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆதரவு எம்எல்ஏவான கருணாஸ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்று முதல்வரும், அமைச்சர்களும் கூறுவதில் கொஞ்சம் கூட உண்மையில்லை என்றார்.
கல்விக்கொள்கை, சமூக நீதி திட்டங்கள், சிறுபான்மையினர் ஆதரவு, மாநில உரிமை என எதிலும் ஜெயலலிதாவின் கொள்கைகள் கடைபிடிக்க படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மத்திய அரசு சொல்வதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஆட்சியாளர்கள் செயல்படுத்துகிறார்கள் என்றும் அவர் சாடினார்.

ஜெ. பெயருக்கு களங்கம்
மொத்தத்தில் தற்போது நடைபெறும் அதிமுக ஆட்சி ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் ஆட்சியாக உள்ளது என்றார்.அமைச்சர்களும், அமைச்சர்களின் உறவினர்களும் தான் இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்று நினைப்பதாகவும் அவர் கூறினார்.

ஆளை பார்த்துதான் வேலை
கடந்த ஒரு ஆண்டு காலத்தில் எந்த உருப்படியான திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை என்றும் எல்லாவற்றுக்கும் அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர் என்றும் கருணாஸ் தெரிவித்தார். கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சென்றால் யார் ஆள் என்பதை பொறுத்துதான் வேலை செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஆட்சி தொடர்வதில் எனக்கு விருப்பமில்லை
இதை சகித்துக் கொள்ள கூடாது என்பதற்காக இப்போது வெளிப்படையாக பேசுகிறேன் என்றும் கருணாஸ் தெரிவித்தார். இந்த ஆட்சி இனி மேலும் தொடர்வதில் எம்.எல்.ஏ.வான எனக்கு விருப்பம் இல்லை என்றும் கருணாஸ் கூறினார்.

சசிகலாவுக்கு விசுவாசம்
எனவே மக்களை நேரடியாக சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாக கூறிய கருணாஸ், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஜெயலலிதா எனக்கு வாய்ப்பளித்தார். அந்த வாய்ப்பை உருவாக்கி தந்தவர் சசிகலா தான், அந்த விசுவாசம் எனக்கு உள்ளது என்றும் கருணாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications