மூளப் போகுது உலகப் போர்... சிவன் மலை ஆண்டவன் உத்தரவால் பரபரப்பு!!
திருப்பூரை அடுத்த சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டைவைக்கப்பட்டுள்ளதால் உலகப் போர் மூளுமோ என பரபரப்பு கிளம்பியுள்ளது.
திருப்பூர் : திருப்பூரை அடுத்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை வைத்து பூஜை செய்யப்படுவதால் உலகப் போர் மூளலாம் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது பழமைவாய்ந்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக ஆண்டவர் உத்தரவு பெட்டி இங்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பெட்டியில் பக்தர் கனவில் தோன்றி ஆண்டவர் குறிப்பிடும் பொருள் வைத்து பூஜிக்கப்படும். உலகநிகழ்வை குறிப்பால் உணர்த்துவதற்காக ஆண்டவன் இடும் கட்டளையே இந்த பொருட்களை வைத்து வழிபடுவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
ஐதீகம்
பக்தரின் கனவில் தோன்றும் பொருள் குறித்து குருக்கள்கள், சாமி சன்னிதியில் வைத்து குறி கேட்டு சுவாமி உத்தரவு அளிக்கும் பட்சத்தில் அந்தப் பொருள் கண்ணாடி பேழையில் வைக்கப்படும். அப்படி வைக்கப்பட்ட அந்த பொருள் பல்வேறு வடிவங்களில் ஆக்கமும், அழிவும் நிகழ்த்தியுள்ளதாக பக்தர்களின் ஐதீகம்.ஆண்டவன் உத்தரவு பெட்டியில், இதற்கு முன்பு தங்கம், ரூபாய் நோட்டு, ஆற்று மணல், தண்ணீர், உப்பு, ஏர்கலப்பை, துப்பாக்கி, இரும்பு சங்கிலி உள்பட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவுப் பெட்டியில் வைக்கும் பொருள்களுக்கு ஏற்ப தமிழக அரசியல் நடவடிக்கைகளும் அரங்கேறி வருவதால் ஒவ்வொரு முறையும் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது.
வில்வ இலையால் வந்த திருப்பம்
ஏப்ரல் மாத தொடக்கத்தில் வில்வ இலையுடன் 108 ருத்ராட்சம் வைத்து கட்டி ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ருத்ராட்சம் வைத்ததால் பல்வேறு அரசியல் மாற்றங்கள் வரும் என சொல்லப்பட்டது அதேபோலவே அதிமுக பல திருப்பங்களை சந்தித்ததை நினைவுகூர்கின்றனர்.
இரும்பு சங்கிலியால் சசி சிறைவாசம்
அரிசி வைத்த போது அரிசி விலை கடுமையாக உயர்ந்ததாகவும், தண்ணீர் வைத்தபோது சுனாமி வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கிலி வைத்ததால் சசிகலா உள்ளிட்டோர் சிறைக்கு சென்றதாகவும் பல்வேறு சம்பவங்களை பக்தர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியோடு பார்க்கின்றனர்.
உத்தரவு பெட்டியில் உலக உருண்டை
கடந்த ஏப்ரல் 21ந்தேதி வலம்புரி சங்கு வைத்து வழிபட்ட நிலையில் நேற்று ஆண்டவர் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை வைக்கப்பட்டுள்ளது. இதனால் உலகத்திற்கு பேரழிவு ஏற்படுவதற்கான அபாயம் ஏற்படுமாம்.
போர் பயம்
இதனால் உள்நாட்டு சண்டை, அண்டைநாடுகளிடையே போர் மூலம் உலகின் பல பகுதிகள் அழியும் சூழல் உருவாகும் என்றும் சிலர் கூறுகிறார்கள். எல்லையில் ராணவ வீரர்களின் தலை துண்டிக்கப்பட்ட விவகாரம் பற்றி எறிவதால் இந்தியா பாகிஸ்தான் இடையெ போர் மூளுமா ? என்றும் சிலர் தங்களது அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.