கமல், ரஜினி யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. இது திருமாவளவன் கருத்து
நெல்லை: நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்பதை தெரிவிக்கும் டிவிட் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கமலின் அரசியல் கருத்துக்கு பலரும் ஆதரவும், எச்.ராஜா உள்ளிட்டோர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது: ஊழலுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ள கமலின் செயல் அரசியலுக்கு வருவதற்கான முயற்சி. ஒரு சில இடங்களில் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக விமர்சிப்பதால் கமலை அக்கட்சியினர் எதிர்க்கின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை பயன்படுத்தி நடிகர்கள் அரசியலுக்கு வர முயற்சிக்கின்றனர். கமல், ரஜினி என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்களை நான் வரவேற்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.