மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த பிரதமர்தானே மோடி? தொல்.திருமாவளவன்
மோடி அரசின் ‘பொருளாதார அவசரநிலை’நவம்பர் 28ஆம் தேதி இடதுசாரி கட்சிகள் நடத்தும் போராட்ட இயக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்க வேண்டுமானால் ஒன்று, சட்டம் கொண்டுவர வேண்டும் அல்லது அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு தொலைக்காட்சி உரையின் மூலம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்க பிரதமர் மோடிக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை. அவர் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த பிரதமர்தானே தவிர இராணுவ சர்வாதிகாரி இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என சட்டவிரோதமான முறையில் அறிவிப்புச் செய்து மோடி அரசு இந்தியாவில் ஒரு 'பொருளாதார அவசரநிலையை'ப் பிறப்பித்திருக்கிறது. மோடி அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கையால் ஏழை-எளிய மக்கள் சொல்லமுடியா இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

உழைத்து சம்பாதித்த தமது சொந்தப் பணத்தை எடுக்க முடியாமல் 80 க்கும் மேற்பட்ட ஏழை பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.அமைப்புசார தொழில் முடங்கிவிட்டது. அதை நம்பியுள்ள கோடிக்கணக்கான மக்கள் சாப்பிட உணவின்றி பட்டினி கிடக்கின்றனர். விவசாயமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதியாக வீழ்ச்சியடையும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்க வேண்டுமானால் ஒன்று, சட்டம் கொண்டுவர வேண்டும் அல்லது அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு தொலைக்காட்சி உரையின் மூலம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்க பிரதமர் மோடிக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை. அவர் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த பிரதமர்தானே தவிர இராணுவ சர்வாதிகாரி இல்லை. இது அப்பட்டமாக அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயல் என ஆரம்பம் முதலே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூறி வருகிறது. இன்று உச்சநீதிமன்றமும் மோடியின் அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதா என ஆய்வு செய்வோம் என அறிவித்திருக்கிறது.
மோடி அரசின் சட்டவிரோதமான இந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தாவிட்டால் இந்துத்துவவாதிகள் இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையை ஒழித்து சர்வாதிகார ஆட்சியைக் கொண்டுவந்துவிடுவார்கள். அதற்கு ஜனநாயக சக்திகள் இடம் தரக்கூடாது. இதை உணர்ந்துதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் நவம்பர் 28 ஆம் நாளை 'தேசிய எதிர்ப்பு நாளாக'அறிவித்திருக்கின்றன. அதை ஆதரித்து அந்தப் போராட்டத்தை வெற்றிபெறச்செய்ய வேண்டியது நமது கடமையாகும். எனவே, அந்தப் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
"பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திட அனுமதிக்க வேண்டும்; விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; வங்கிகளில் செயல்படா சொத்துக்கள் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ள, பணக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 11 லட்சம் கோடி ரூபாயையும் திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்; அவ்வாறு கடன் பெற்றவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்கிட வேண்டும்; சஹாரா-பிர்லா ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ள விவரங்கள் குறித்து புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும்;
வரி ஏய்ப்புக்கு வகைசெய்திடும் இரட்டை வரி ஒப்பந்தங்களை ரத்து செய்திட வேண்டும்; வெளிநாடுகளில் கணக்கு வைத்திருப்போர் பெயர்களை வெளியிட வேண்டும்; அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து நவம்பர் 28 ஆம் தேதி தமிழ்நாட்டில் இடதுசாரிக் கட்சிகள் ஒருங்கிணைத்து நடத்தவுள்ள அனைத்து விதமான போராட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications