தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி: தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்மநபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்ததால் தூத்துக்குடி பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாநகர காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்மநபர், தூத்துக்குடியில் இயங்கும் 4 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை இன்று மாலை 4 மணிக்குள் வெடிக்குமென்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

உடனடியாக இது தொடர்பாக தூத்துக்குடி போலீசாருக்கு தெரிவிக்கப் பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்கள் உதவியுடன் தூத்துக்குடியில் இயங்கி வரும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது வெடிகுண்டுகளோ அல்லது சந்தேகத்திற்குரிய வகையில் ஏதேனும் பொருட்களோ சிக்கவில்லை. எனவே, தொலைபேசி மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
மிரட்டல் விடுக்கப்பட்ட தொலைபேசி எண் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அது தூத்துக்குடி வட்டக்கோயில் அருகே உள்ள ஒரு பொதுத் தொலைபேசியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எனவே, தொலைபேசியில் பேசியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாக பரவிய தகவலால் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்தனர். பின்னர், வெடிகுண்டு வைக்கப் பட்டதாகக் கூறப்பட்டது வெறும் மிரட்டல் எனத் தெரியவந்ததை அடுத்து அவர்கள் ஆறுதல் அடைந்தனர். இதனால் தூத்துக்குடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications