திருச்செந்தூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை.. பெண்ணின் சகோதரர் உட்பட மூவருக்கு வலை
தூத்துக்குடி: சினிமாவை மிஞ்சும் ஒரு கொடூரமான கொலை திருச்செந்தூரில் நடந்துள்ளது. பட்டப்பகலில் 30 வயதான இளைஞர் ஒருவரை 3 பேர் வழிமறித்து வெட்டித் கொலை செய்துள்ளனர். அந்த நபர் ரத்த வெள்ளத்தில் அருகே இருந்த கடையில் சென்று தப்பிக்க முயன்ற நிலையில், கடைக்குள்ளும் சென்று வெட்டி கொன்றுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் திருச்செந்தூர் ஆலந்தலை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 30 வயதான இவர், அங்குள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகிறார். எலக்ட்ரீசியனாக வேலை செய்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் இவரைக் காதலித்துள்ளார்.

கொலை
இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்குத் தெரிய வந்துள்ளது. காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் பெற்றோர், காதலை விட்டுவிடும்படி வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சூழலில் தான் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொள்ள முயன்றுள்ளனர். அப்போது போலீஸ் நிலையத்தில் வைத்துப் பேசி, அந்தப் பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையே மணிகண்டன் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவுக்கு மாலை போட்டு, விரதம் கடைப்பிடித்து வந்திருக்கிறார். இன்று காலை அவர் வழக்கம் போல வேலைக்காகத் தனது டூவீலரில் திருச்செந்தூர் சென்று கொண்டிருந்தார். அப்போது தோப்பூர் விலக்கு அருகே திடீரென அவரை வழிமறித்த 3 மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்ட ஆரம்பித்தனர்.
கொடூரம்
மூன்று பேர் தன்னை சூழ்ந்து கொண்டு தாக்கியதால் அதிர்ச்சி அடைந்த, மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சாலையோரம் அமைந்திருந்த மரக்கடைக்குள் ஓடினார். இருப்பினும், அவரை துரத்திச் சென்ற மர்ம நபர்கள் மரக்கடையில் பதுங்கி இருந்த மணிகண்டனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த கொடூரத் தாக்குதலில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
விசாரணை
இந்தக் கொலை குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்செந்தூர் தாலுகா போலீசார், மணிகண்டன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ள போலீசார், மரக்கடையில் அமைந்துள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதில் காதல் விவகாரத்தில் பெண்ணின் சகோதரரும் அவருடைய நண்பர்களும் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்திக்கிறார்கள். அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் இப்போது இறங்கியுள்ளனர். திருச்செந்தூர் அருகே பட்டப்பகலில் நடந்த இந்தப் படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications