கூவத்தூர் பேரம் என்னாச்சுன்னு தினகரனிடம்தான் கேட்கனும்... தோப்பு கோஷ்டியிடம் சீறிய கொங்கு கேபினட்!
கூவத்தூரில் பேசப்பட்ட பேரத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்கிறது அதிமுகவின் தோப்பு கோஷ்டி.
சென்னை: கூவத்தூர் பேரத்தை நிறைவேற்றக் கோரும் தோப்பு வெங்கடாசலம் கோஷ்டிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு அமைச்சர்கள் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளனர். கூவத்தூரில் பேசப்பட்ட பேரம் தொடர்பாக தினகரனிடம் போய் கேளுங்கள் என கடுப்படித்துள்ளனர் எடப்பாடி கோஷ்டி அமைச்சர்கள்.
தமிழக அரசின் ஒவ்வொரு நாட்களையும் எண்ணிக் கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அந்தளவுக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்களின் குரல் வெடித்துக் கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பாக ஒரு சமூக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பெரம்பலூர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒன்று திரண்டனர். ஆட்சியைக் காப்பாற்றும் அளவுக்கான எண்ணிக்கையில் இருக்கிறோம். ஆனாலும், அமைச்சரவையில் எங்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என நெருக்கடி கொடுத்தனர்.

ஸ்லீப்பர் செல்கள்
அந்த எம்.எல்.ஏக்களைத் தேடிச் சென்று சமாதானப்படுத்தினார் அமைச்சர் செங்கோட்டையன். அமைச்சரின் கோரிக்கையை ஏற்று அவர்கள் இப்போது அமைதி காக்கின்றனர். ஆனால் டெல்லியின் ஸ்லீப்பர் செல்களாக இருக்கும் அவர்கள் எந்த நேரத்திலும் வெடிக்க கூடும்.

தோப்பு கோஷ்டி
இதனிடையே தோப்பு வெங்கடாசலம் தலைமையில் ஒரு கோஷ்டி கிளம்பியுள்ளது. இதில் பழனியப்பன், செந்தில்பாலாஜி ஆகியோரும் அடக்கம். இவர்களது கவலையே, கூவத்தூரில் அரசை ஆதரிக்க பேசப்பட்ட பேரம் என்னாச்சு என்பதுதான்.

ரகசிய ஆலோசனை
இதற்காக கடந்த வாரம் எம்.எல்.ஏக்கள் விடுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றாத கையாலாகாத அரசாக இது இருக்கிறது. நாம் வெளியேறினாலே பெரும்பான்மையை எடப்பாடி இழந்துவிடுவார். இது தெரிந்தும் நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றுதில் அலட்சியம் காட்டுகிறார் எனக் கொந்தளித்தனர். இந்த கூட்டம் பற்றி கேள்விபட்ட கொங்கு மண்டல அமைச்சர் ஒருவர், இந்தக் கூட்டத்துக்கு தலைமையேற்றவரிடம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

எடப்பாடியிடமும் கறார்
அப்போது, கோரிக்கைகளில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என தோப்பு கோஷ்டி கண்டிப்புடன் கூறிவிட்டது. அத்துடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்த போதும் கூவத்தூர் பேரம் குறித்தே விவாதித்துள்ளனர்.

தினகரனிடம் கேளுங்கப்பு...
இது குறித்து தோப்பு கோஷ்டியிடம் பேசிய கொங்கு அமைச்சர் ஒருவர், உங்களுக்கு கூவத்தூரில் வாக்கு கொடுத்தவர் தினகரன். அவர் இப்போது திகார் சிறையில் இருக்கிறார்.. வேண்டுமானால் திகாருக்குப் போய் தினகரனிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என கடுப்படித்திருக்கிறார். இப்படி நம்மை சீண்டுகிறார்களே... பதிலடி தருவோம் என குமுறிக் கொண்டிருக்கிறது தோப்பு கோஷ்டி.
ஆடும் அரசாங்கம்!












Click it and Unblock the Notifications