85 ஆண்டுகளுக்கு பின்னர் 'சோழர் கால' கங்கைகொண்ட சோழபுரம் கோயில் குடமுழுக்கு!
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அரியலூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் 85 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலை ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கட்டியதாக வரலாறு.
கங்கையையும், கடாரத்தையும் வெற்றிக்கொண்ட ராஜேந்திர சோழன் அந்த கருவூலத்தில் இருந்து கொண்டு வந்தப் பொருட்களை கங்கை கொண்ட சோழபுரத்தில் வைத்ததாக கூறப்படுவதுண்டு. இங்குள்ள நந்தி மீது தினமும் சூரிய ஒளி பட்டுச் சிதறி அந்த ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலித்து பிரகாசிப்பது மிகவும் இக்கோயிலின் சிறப்பு என கூறப்படுகிறது.

தமிழகத்திலேயே பெரிய லிங்கம்
இந்தக்கோவிலில் ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் வெகு அழகாக நவகிரகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே மிகவும் பெரிய அளவிலான லிங்கம் இருப்பது இங்கு தான்.

ஒரே கல்லால் ஆன லிங்கம்
இங்குள்ள லிங்கம் 13.5 அடி உயரம். 60 அடி சுற்றளவும் கொண்டது. இந்த லிங்கம் ஒரே கல்லால் ஆனது மிகவும் சிறப்பு. இங்கு உள்ள நந்தியும் மிகவும் பெரிய அளவு கொண்டது .இது முழுக்க சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டது.

சூரிய ஒளி பட்டு பிரகாசிப்பது சிறப்பு
நந்தி லிங்கத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது. தினமும் சூரிய ஒளி இந்த நந்தி மீது பட்டுச் சிதறி அந்த ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீதும் பட்டு பிரதிபலித்து பிரகாசிப்பது மிகவும் அற்புதமான காட்சி என கூறப்படுகிறது.

லிங்கத்திற்கு பின்னரே கோபுரம்
இங்கும் தஞ்சாவூரை போன்று லிங்கம் பிரதிஷ்டை செய்த பின்னரே கோபுரம் கட்டப்பட்டுள்ளது. தஞ்சைக்கு அடுத்து இந்த கோபுரம் தான் தமிழகத்தில் பெரியது.

கலசத்தின் நிழல் பூமியில் விழாது
இதனுடைய கட்டுமானப்பணிகள் சோழர் காலத்தில் உள்ள கட்டிடக்கலையின் திறமையை வெளிப்படுத்துகிறது. இந்த கோபுரக் கலசத்தின் நிழல் பூமியில் விழாது என்பது சோழர் கட்டடக் கலையின் சிறப்பம்சம்.

கங்கை நீர் வந்த கதை
இந்தக் கோவிலை நிர்மாணித்தவர் ராஜேந்திரசோழன். தஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜசோழன் மகனான இவர் தந்தை வழியில் ஆன்மீகத்தையும் பரப்பினார். இந்த கோவிலை உருவாக்கி கும்பாபிஷேகத்திற்கு கங்கையிலிருந்து புனித நீரை தன்னிடம் தோற்ற மன்னர்களின் தலையில் ஏற்றி இங்கு கொண்டு வரச் செய்தாக வரலாறு கூறுகிறது. மேலும் கும்பாபிஷேகம் செய்யும் புனித நீரை கோவிலுக்கு உள்ளேயே கிணறு வெட்டச் செய்து, அந்த புனித நீர் அங்கு வந்து சேரும் படி நேர்த்தியாக ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

85 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு
இத்தனை பெருமைகள் வாய்ந்த இந்த கோயிலை யுனேஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இக்கோயிலில் 85 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. திருப்பணிகள் முடிந்த நிலையில் வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்ற குடமுழுக்கை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் கண்டுகளித்தனர்.












Click it and Unblock the Notifications