நெல்லை அருகே அரசு பஸ் - லாரி மோதல்.. குழந்தை உட்பட 3 பேர் பலி
நெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
நெல்லையில் இருந்து அரசு பேருந்து ஒன்று புளியங்குடி நோக்கி சென்றுகொண்டிருந்தது. ஆலங்குளம் அருகே சீதபற்ப நல்லூரை அடுத்த புதூரை அருகே வந்தபோது கேரளாவில் இருந்து நெல்லைக்கு சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி, அதி வேகமாக வந்து அரசு பஸ் மீது மோதியது. இதில் பஸ் அப்பளமாக நொறுங்கியது.
இதில் ஒரு வயது பெண் குழந்தை உள்பட 3 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 17 பேர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.,விக்ரமன் தலைமையில் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். லாரி டிரைவரும் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களை நெல்லை கலெக்டர் கருணாகரன் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்தில் நெல்லை-தென்காசி சாலையில் நேற்று இரவு 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.