2 பெண்கள், ஒரு ஆண் உள்பட 3 பேரை வெட்டி கொலை செய்த ஆண்டவர்
நெல்லை: திருநெல்வேலி அருகே உள்ள ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது நெட்டூர் கிராமம். இக்கிராமத்தில் கடந்த சி லதினங்களுக்கு முன்பு நயினார் என்பவரது மகன் ஆண்டவர் என்ற முத்துராஜ் அப்பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகள் கோமதி என்ற மனநலம் பாதித்த பெண்ணை கடந்த 12 ந் தேதி அன்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது இதனைக் கண்ட முருகனின் மனைவி கூச்சல் போட்டுள்ளார். இதையடுத்து ஆண்டவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் முருகன் குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய முருகனின் மனைவி பேச்சியம்மாள், மகள் மாரியம்மாள், மாமனார் கோவிந்த சாமி ஆகியோரை ஆண்டவர் என்ற முத்துராஜ் இன்று மாலை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் மூன்று உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். தப்பியோடிய ஆண்டவனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தையும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.