புதுச்சேரி: அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 3 சகோதரிகள் கடலில் குதித்து தற்கொலை
விழுப்புரம்: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம குடியிருப்பில் சிறு வயதில் முதல் இருந்து வந்தவர்கள் பீகாரைச் சேர்ந்த ஹேமலதா, ஜெயஸ்ரீ, அருணாஸ்ரீ, ராஜ்யஸ்ரீ மற்றும் நிவேதிதா ஆகிய 5 சகோதரிகள். அதில் ஹேமலதா மீது கடந்த 2002ம் ஆண்டு ஆசிரமம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. ஹேமலதா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மேலும் சகோதரிகள் ஆசிரமம் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். ஆனால் இது பொய் புகார் என ஆசிரமம் தெரிவித்தது.
இந்நிலையில் சகோதரிகளை வெளியேற்றுவது குறித்து ஆசிரமம் உயர் நீதிமன்றத்தை அணுகியது. உயர் நீதிமன்றம் சகோதரிகளை ஆசிரமத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சகோதரிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சகோதரிகள் 5 பேரும் ஆறு மாத காலத்திற்குள் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும், அதுவரை ஆசிரம விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
நேற்றுடன் உச்ச நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடிந்தது. ஆனால் சகோதரிகள் ஆசிரமத்தை விட்டு வெளியேற மறுத்தனர். இந்நிலையில் ஹேமலதா ஆசிரம குடியிருப்பின் 4வது மாடியில் நேற்று ஏறிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஆசிரமத்திற்கு வந்தனர். அப்போது சப் இன்ஸ்பெக்டர் சஜீத் சாதாரண உடையில் நிருபர் போன்று சென்று ஹேமலதாவை காப்பாற்றினார். அதன் பிறகு அந்த 5 சகோதரிகளும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஆசிரமத்தை விட்டு வெளியேறிய அவர்கள் குடும்பத்துடன் கடலில் குதித்தனர். இதில் அருணாஸ்ரீ, ராஜ்யஸ்ரீ மற்றும் அவர்களின் தாய் பலியாகி அவர்களின் உடல்கள் விழுப்புரம் அருகே கரையில் ஒதுங்கியது. மீதமுள்ள 3 சகோதரிகள் மற்றும் தந்தையை காப்பாற்றியவர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.