கொடைக்கானலில் கனமழையால் மரம் விழுந்து 3 சுற்றுலா பயணிகள் பலி
வத்தலக்குண்டு: கொடைக்கானலில் கனமழையால் இன்று மரம் முறிந்து விழுந்ததில் சுற்றுலா பயணிகள் மூவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள வட்டக்கானல் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. அப்போது கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு, அருவியில் தண்ணீர் கொட்டும் அழகை கண்டுகளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது 90 அடி உயரம் கொண்ட மரம் ஒன்று திடீரென முறிந்து, சுற்றுலா பயணிகள் மீது விழுந்தது. இதில் பெங்களூரை சேர்ந்த அபயா, சென்னையை சேர்ந்த வினோத் மற்றும் வடலூரை சேர்ந்த இளங்கோ ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூவரும் பலியானார்கள்.