கருணாநிதியை எதிர்த்த துறைமுகம் காஜா! பார்ப்பதற்கு தான் அமைதி! ஸ்டாலின் கூறிய ஃபிளாஷ்பேக்!
சென்னை: துறைமுகம் காஜாவை பொறுத்தவரை பார்ப்பதற்கு தான் அவர் அமைதி என்றும் ஆனால் கருணாநிதியையே அவர் எதிர்த்தவர் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற திமுக இஃப்தார் விழாவில் இந்த பிளாஷ்பேக் கதையை கூறினார். மேலும், அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு;
''அறிவாலயத்திற்குள் நான் நுழையும்போது வாசலில் நின்று, இரண்டு தூண்களைப் போல ஒரு தூண் நம்முடைய துறைமுகம் காஜா, இன்னொரு தூண் பூச்சி முருகன்.

அவர்கள் முகங்களைத்தான் நான் முதலில் பார்க்க வேண்டும், பார்த்துவிட்டு அதற்குப் பிறகுதான் நான் உள்ளே போகமுடியும்.
காஜாவைப் பார்த்தால் மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால் அவர் தலைவர் கலைஞரையே எதிர்த்து நின்றவர் துறைமுகம் தொகுதியில். 1989-ஆம் ஆண்டு போட்டியிட்டு தேர்தல் களத்தில் சந்தித்தவர், தலைவர் கலைஞரை எதிர்த்து அன்றைக்கு நின்றவர்.
அதன்பிறகு தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கழகத்தில் வந்து சேர்ந்துவிட்டார். நம்முடைய இயக்கத்திலேயே தன்னை இணைத்துக் கொண்டார்.
2000 ஆண்டிலிருந்து 2003 வரையில் கழகத்தின் வெளியீட்டுச் செயலாளராக இருந்தார். 2003-ஆம் ஆண்டிலிருந்து தலைமை நிலையச் செயலாளராக பணியாற்ற வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவரை நியமித்தார்.
இப்போது 2023! இந்த இருபது ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைமை நிலையச் செயலாளராக இருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல.

அதைத் தொடர்ந்து, நம்முடைய ஆட்சி மலர்ந்த பிறகு இப்போது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இப்தார் நிகழ்ச்சியாக மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரைக்கும் ஒற்றுமையை வலியுறுத்தக்கூடிய நிகழ்ச்சியாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடக்கம், இரக்கம், உதவுதல், அன்பு, ஈகை ஆகிய அருங்குணங்களைப் பற்றிய பாடங்கள்தான் திருக்குரானில் அதிகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.''












Click it and Unblock the Notifications