ஏலக்காய் தோட்டத்தில் புகுந்து தொழிலாளியை கொன்ற புலி.. அச்சத்தில் நீலகிரி மக்கள்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஏலக்காய் தோட்டத்தில் புலி தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பகுதியிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மகு என்பவர் குடும்பத்தினருடன் தங்கி பணியாற்றி வந்தார்.

நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், காலை வரை திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலை, தேயிலை தோட்டம் அருகேயுள்ள ஏலத்தோட்டத்தில் மகுவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அந்த பகுதியில் புலி ஒன்று நடமாடி வருவதாகவும், ஏற்கனவே 10 மாடுகளை அது கொன்றுள்ளதாகவும், மகுவை அந்த புலிதான் கொன்றிருக்கும் எனவும் மக்கள் சந்தேகம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய ஆய்வில், புலி தாக்கியதில் மகு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
தற்போது, புலியை கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், அதிரடிப்படை வீரர்களும், பாதுகாப்பிற்காக காவல்துறையினரும் தேவர்சோலை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் நீலகிரி மாவட்ட மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
பந்திப்பூர் வனவிலங்கு சரணாலய பகுதியில் இருந்து புலி ஊடுருவியிருக்க கூடும் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications