ஆளுநர் அறிக்கையில் திருப்தி இல்லாமல் அப்பல்லோ 2-வது வார்டு வரை போன திருமாவளவன்!
சென்னை : முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். முதல்வர் விரைவில் வீடு திரும்புவார் என அதிமுக தலைவர்கள் கூறினர் என்றும் அப்பல்லோவிற்கு சென்ற திருமாவளவன் தகவல் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று நேரில் சென்றார். இன்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த திருமாவளவன், மருத்துவமனைக்குள் சென்று அதிமுக மூத்த தலைவர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரிக்கவே அப்போலோ மருத்துவமனைக்கு வந்ததாக அவர் விளக்கம் அளித்தார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஆளுநர் அளித்த அளிக்கையில் திருப்தியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.
அப்பல்லோ மருத்துவமனையில் எந்த கெடுபிடியும் கொடுக்கவில்லை. மருத்துவமனையில் 2வது தளத்துக்கு சென்ற தான் முதல்வரை சந்திக்கவில்லை அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளிடம் விசாரித்தேன். அவர் நலமுடன் இருப்பதாக கூறினர். முதல்வர் ஜெயலலிதா நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும். அவர் வழக்கம் போல அரசியல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.