போதையில் இருந்த தாய் பாலுாட்டியதில் 6 மாத பெண் குழந்தை பலி - திருப்பூரில் பரிதாபம்
திருப்பூர்: திருப்பூரில் மது போதையில் இருந்த தாய் பாலூட்டியதில், ஆறு மாத பெண் குழந்தைப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த துப்புரவு தொழிலாளி சேதுபதி என்பவரின் மனைவி இந்திரா. இவர்களுக்கு குழந்தைகள் தனலட்சுமி(5), குணசேகரன்(3) மற்றும் ஸ்ரீதேவி என்ற ஆறு மாத பெண் குழந்தை உட்பட மூன்று குழந்தைகள்.
இந்நிலையில், நேற்று மாலை திருப்பூர் கஜலட்சுமி தியேட்டர் பகுதியில் மது போதையில் இருந்த இந்திரா, ஸ்ரீதேவிக்கு தாய்ப்பால் ஊட்டியதாகத் தெரிகிறது. அப்போது, குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அக்குழந்தை இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். பிறகு, குழந்தையின் சடலத்துடன் அங்கிருந்து வெளியேறியவர் அவசர சிகிச்சை பிரிவு முன் தரையில் அமர்ந்து, மற்ற குழந்தைகளுடன் அழுது புரண்டுள்ளார்.
பின்னர், அங்கிருந்த போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். மேலும், குழந்தையின் தந்தை சேதுபதியை அழைத்துவர திருப்பூர் தெற்கு போலீசார் ஏற்பாடுகளை செய்தனர்.
குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம், போதையில் தாய்ப்பால் அளிக்கப் பட்டது தானா அல்லது வேறு ஏதேனுமா என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்னரே உறுதியாக தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications