மருமகளுடன் சேர விடாமல் மகனைப் பிரித்த தாயார்.. 5 நாள் சிறையில் அடைக்க கோர்ட் அதிரடி உத்தரவு!
திருப்பூர்: திருப்பூரில் மருமகளுடன் சேர விடாமல் மகனைப் பிரித்ததாக வழக்கு தொடரப்பட்ட மாமியாருக்கு 5 நாள் சிறைத் தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து திருப்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
அந்தப் பெண்மணிக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ரெமீதா (29). இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள். கடந்த 2012-ஆம் ஆண்டு திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் ரெமீதா.
அதில், நானும் எனது கணவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணமாகி சில மாதங்களில் எனது கணவர் என்னை பிரிந்து சென்றார். அதற்கு அவரது தாயார் நஞ்சம்மாள் (54) தான் காரணம். எனது மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை திருப்பூர் முதலாவது குற்றவியல் நடுவர் மன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி தற்போது தீர்ப்பளித்துள்ளார். அதில், நஞ்சம்மாளுக்கு 5 நாள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.