வளையாத செங்கோல்..அன்றே சொன்ன வள்ளுவர்.. மோடிக்கு நினைவு படுத்த வேண்டுமா?..ப.சிதம்பரம் கேள்வி
சென்னை: திருவள்ளுவர் அரசனுக்கு தேவையான நான்கு குணங்களில் ஒன்றாக 'செங்கோலை' வைத்தார் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மணிப்பூர் மக்கள் வன்முறையை தவிர்த்து அமைதியாகவும், சமாதானமாகவும் இருக்க வேண்டும் என்று மோடி வேண்டுகோள் விடுக்கவில்லை. அவருடைய கரங்களில் உவமையான 'செங்கோல்' இருக்கிறது என்று யாராவது அவருக்கு நினைவு படுத்த வேண்டுமோ என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் உள்ள இந்தியாவின் பழைய நாடாளுமன்ற கட்டிடம் அருகே முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்றத்தை கட்டும் பணிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த 3 ஆண்டுகளாக இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அந்த பணிகள் முழுவதுமாக நிறைவடைந்தன.

இந்த நிலையில் சாவர்க்கர் பிறந்தநாளான நேற்றைய தினம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பார் என்றும் அறிவிப்பு வெளியானது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை திறப்பு விழாவுக்கு அழைக்காததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவையே புறக்கணித்தன.
இதற்கிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்கள் முன் தோன்றி சோழர் காலத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பயன்படுத்தப்படுவதைபோல், திருவாவடுதுறை ஆதீனம் 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்தின்போது ஜவஹர்லால் நேருவிடம் வழங்கிய செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவப்போவதாக அறிவித்தார். அன்றிலிருந்தே செங்கோலை பற்றிய பேச்சுக்கள் எழத் தொடங்கின. பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களை பெருமைப்படுத்துவதாக ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் முடியாட்சியை அங்கீகரிக்கும் வகையில் இது இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார்.

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது முதலே எதிர்கட்சி அரசியல் தலைவர்கள் பலரும் பிரதமர் மோடியை சாடி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதை அடுத்து செங்கோல் வளைந்து விட்டது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டது. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தனது ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், திருவள்ளுவர் அரசனுக்குத் தேவையான நான்கு குணங்களில் ஒன்றாகச் 'செங்கோலை' வைத்தார் - குறள் 390 (செங்கோல்: செங்கோன்மை) மற்று மூன்று குணங்கள்: கொடை, இரக்கம் மற்றும் ஏழை, எளிய மக்களைக் காத்தல்
குறள் 546 இல் அரசனைத் திருவள்ளுவர் எச்சரிக்கிறார்:
'வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோல்அதூஉம் கோடாதெனின்'

கோடாத கோல்:
வளையாத செங்கோல். 2023 ஆண்டில் தேவையான பாடத்தை அன்றே வள்ளுவர் சொன்னார். மணிப்பூர் மாநிலத்தில் கலவரங்கள் வெடித்து 3 வாரங்கள் ஓடிவிட்டன. 75 பேர் மடிந்திருக்கிறார்கள். ஆனால் இந்த நாள் வரை மாண்புமிகு பிரதமர் மணிப்பூர் கலவரங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. மணிப்பூர் மக்கள் வன்முறையைத் தவிர்த்து அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுக்கவில்லை. அவருடைய கரங்களில் உவமையான 'செங்கோல்' இருக்கிறது என்று யாராவது அவருக்கு நினைவு படுத்தவேண்டுமோ? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications