திருவாரூரில் இன்று ஆழித்தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
சென்னை: உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் கோயிலில் ஆழித்தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் திருவாரூரில் குவிந்துள்ளனர்.
5 ஆண்டுகளுக்குப் பின்னர் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் இன்று நடைபெற உள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூரில் குவிந்து வருகின்றனர்.
திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் இருந்து வருவது தியாகராஜசுவாமி கோயில். இக்கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே 2வது மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்படுகிறது. மற்ற ஊர் தேர்களை போல் இல்லாமல் எண்கோண வடிவில் 20 பட்டைகளாக சுமார் 350 டன் எடையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தேரானது, அலங்கரிக்கப்பட்டு வீதிகளில் ஆடி அசைந்து வலம் வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும்.

இத்தகைய தேரில் பழுது ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2010ம் ஆண்டில் இறுதியாக தேரோட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் புதுப்பிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது. வழக்கமான ஆழித்தேரோட்டத்தில் தியாகராஜசுவாமி, விநாயகர், சுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆனால், ஆழித் தேரோட்ட விழாவை இரண்டு நாள் விழாவாக நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி இந்த ஆழித்தேர் விழாவை இரண்டு நாள் நடத்த அறநிலையத் துறை முடிவு செய்தது. இதையொட்டி, இரண்டு நாள் திருத்தேரோட்ட வைபவம் நடைபெறுகிறது.
நேற்று காலை ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதியாகராஜ சுவாமி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், அம்பாள், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய உத்ஸவ மூர்த்திகள் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கோயிலிலிருந்து ஈசான்ய மூலையில் விட்டவாசல் கோபுரம் மற்றும் பிரதான கோயில் முன்வாசல் சன்னதி தெரு வழியாக வந்தடைந்தனர். குறிப்பாக, தியாகேசர் அஜபா நடனத்துடன் வந்து ஆழித்தேரில் எழுந்தருளினார். இதை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தார்கள்.
நேற்று காலை விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்று வடக்குவீதி முனையில் நிறுத்தி வைத்துவிட்டு பிறகு, தேர்நிலைக்கு சிறிது தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுப்பிரமணியர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

இன்று வியாழக்கிழமை ஐந்து வருடத்துக்கு நடைபெறுகிற ஆழித்தேரோட்ட வைபவத்தைத் தரிசிக்க, இப்போதே குவியத் துவங்கிவிட்டார்கள் பக்தர்கள்!
திருமுறையில் பாடல் பெற்ற 24.5 அடி நீளம், 1.5 அடி உயரம் கொண்ட 2 இரும்பு அச்சுக்களில் 9 அடி விட்டம், 1.5. அடி அகலம், 4 இரும்பு சக்கரங்களின் மேல் வர்ணிக்க இயலாத கலை பொக்கிஷமான சிற்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ள ஆழித் தேர் 4 வீதிகளிலும் அசைந்து வரும் அழகை காண தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தியாகராஜர் கோவிலை சுற்றிலும் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரம், 4 கோபுர வாசல்களில் மெட்டல் டிடெக்டர் கருவி வாயிலாக கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications