திமுக தொண்டர்களின் நடவடிக்கைக்காக வருத்தம் தெரிவிக்கிறோம் - டிகேஎஸ் இளங்கோவன்
வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தொண்டர்களின் நடவடிக்கைக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம் என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனை சென்ற வைகோவிற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வைகோ வாகனம் மீது கற்கள் வீசி தாக்கினர். தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, செருப்பை எடுத்து காட்டினர்.
இது அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வைகோ மிகுந்த வருத்தத்துடன் தனது வாகனத்தில் ஏறிச் சென்றார். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், திமுக தொண்டர்களின் நடவடிக்கைக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறினார். தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டதால் வைகோ திரும்பிச்செல்ல நேரிட்டது.

திமுக தொண்டர்களின் நடவடிக்கைக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கருணாநிதியை சந்தித்துள்ளனர். பொருளாளர் ஸ்டாலின் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெறும் யாரையும் பார்க்க தடையில்லை என்பதை கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். வைகோவை ஏன் அழைத்து செல்லவில்லை என எங்களிடம் ஸ்டாலின் கேட்டார்.
வைகோ மருத்துவமனை வருவது முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. வைகோவை அழைத்துச் செல்ல காத்திருந்தபோது, எதிர்பாராத விதமாக தாக்குதல் சம்பவம் நடந்துவிட்டது என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications