ராம்குமார், காவிரி பரபரப்புக்கு இடையே நைஸாக கூட்டணியை மாற்றிய ஜி.கே.வாசன்
சென்னை: காவிரி பிரச்சனை ஒருபக்கம்.. இன்னொரு பக்கம் ராம்குமார் மர்ம மரணம்... இப்படியான அமளி துமளிகளுக்கு நடுவே கூட்டணியை அசால்ட்டாக மாற்றியிருக்கிறார் ஜி.கே.வாசன். உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்போம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலின் போது கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியாமல் திணறி வந்தார் ஜி.கே.வாசன். அப்போதே திமுக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என தமாகா மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.
ஆனால் அதிமுகவுடன் மும்முரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் ஜி.கே.வாசன். இருந்தபோதும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என்ற அதிமுகவின் நிபந்தனையை வாசன் ஏற்க மறுத்தார்.
கலகலத்த தமாகா
இந்த நிலையில் திடீரென தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியில் வாசன் ஐக்கியமானார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பல தலைவர்கள் தமாகாவை விட்டு வெளியேறினர். அப்போதே தமாகா கலகலக்க தொடங்கியது.
கேள்விக்குறியான எதிர்காலம்
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி படுதோல்வியைத் தழுவியது. இதனால் தமாகாவின் எதிர்காலமே கேள்விக்குள்ளானது. வேறுவழியில்லாமல் காங்கிரஸில் மீண்டும் இணைவதற்கான அத்தனை முயற்சிகளையும் வாசன் மேற்கொண்டார்.
கண்டுகொள்ளாத காங்கிரஸ்
ஆனாலும் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. அண்மையில் சென்னை வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடனும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருந்தார் வாசன்.
திடீர் சந்திப்பு- கூட்டணி அறிவிப்பு
இந்த நிலையில் திடீரென இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை வாசன் சந்தித்து பேசினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், கட்சியில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் திமுகவுடன் கூட்டணி அமைப்போம் என்றார். பின்னர் மதுராந்தகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் தமாகா கூட்டணி அமைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வாசன்.
தமிழகமே காவிரி, ராம்குமார் என பரபரப்பாக இருக்க டக்கென கூட்டணியை மாற்றியிருக்கிறார் ஜி.கே.வாசன்!