பக்ரீத் பண்டிகைக்கு ஒட்டகம் வெட்ட தடை... சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகத்தை அறுத்து குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் மரபாகும். இதற்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, பக்ரீத் பண்டிகையின் போது, ஒட்டகங்கள் தமிழகத்திற்கு கொண்டு வந்து வெட்டப்படுவது சட்டப்படி குற்றம் என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ராதா ராஜன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒட்டங்களை வெட்டுவதற்கு என்று பிரத்யேக அறுவைக் கூடங்கள் இல்லாததால் ஒட்டகங்கள் வெட்ட அனுமதிக்க முடியாது என்று கூறி, ஒட்டகம் வெட்ட இடைக் கால தடை விதித்தது.
இதனையடுத்து, வரும் 13ம் தேதி பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகத்தை அறுத்து குர்பானி கொடுக்க முடியாத நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒட்டகம் வெட்டுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதைக் கண்டித்து இன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமுமுகவின் மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications