மனித ஏணி அமைத்து வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட தமுமுக வாலிபர்கள்
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக தொண்டர்கள் மீட்டு வருகிறார்கள். ஒரு இடத்தில் அவர்கள் மனித ஏணி அமைத்து மக்களை மீட்டுள்ளனர்.
வரலாறு காணாத மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை மக்களை ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு வருகிறார்கள். அவர்கள் தவிர தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்களும் மீட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக வாலிபர்களும் தத்தளிக்கும் மக்களை தொடர்ந்து மீட்டு வருகிறார்கள். மேலும் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர், போர்வை, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகிறார்கள்.
ஒரு இடத்தில் வெள்ளம் வீட்டுக்குள் புகுந்ததால் மாடியில் தஞ்சம் அடைந்த குடும்பத்தினரை தமுமுகவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்கள் மனித ஏணியாய் செயல்பட்டு அந்த குடும்பத்தினரை மாடியில் இருந்து இறக்கி படகு மூலம் மீட்டுள்ளனர்.
இது தவிர இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான காதர் முஹைதீன் தனது வயதையும் பொருட்படுத்தாமல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.