தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜன. 23-ல் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது!!
தமிழக சட்டசபை வரும் 23-ந் தேதி கூடுகிறது. முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது கூட்டத் தொடர் இது.
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 23-ந் தேதி ஆளுநர் வித்யாசகர் ராவ் உரையுடன் தொடங்க உள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.
கடந்த ஆண்டு தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலர் பதவியை கைப்பற்றிய சசிகலா திடீரென முதல்வராக முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனால் நடப்பாண்டின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் எப்போது கூடும் என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் வரும் 23-ந் தேதி சட்டசபை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் இது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றுவார்.
ஆளுநர் உரையில் அதிமுக அரசின் நலத் திட்டங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சில நாட்கள் சட்டசபையில் விவாதம் நடைபெறும்.
வரலாறு காணாத வறட்சி, விவசாயிகள் தற்கொலை விவகாரம் ஆகியவை குறித்தும் இக்கூட்டத் தொடரில் விவாதிக்கப்படலாம்.