சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெற சபாநாயகர் மறுப்பு - எதிர்கட்சிகள் வெளிநடப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து நீக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெற சபாநாயகர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த புதன்கிழமை அன்று அவையின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி திமுகவை சேர்ந்த 80சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தனபால் ஒரு வார காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் நேற்று சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சபாநாயகர் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று நேற்று கோரிக்கை வைத்தனர். அதனை சபாநாயகர் தனபால் நிராகரிக்கவே, அவர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் போட்டி சட்டசபை கூட்டத்தை நடத்தினர். சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் சென்றனர்.
இன்றும் கேள்வி நேரத்திற்கு பிறகு எட்டு திமுக எம்எல்ஏக்கள் உடன் காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் லீக் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சேர்ந்து மீண்டும் வலியுறுத்தினர்.
அதற்கு சபாநாயகர் கடந்த புதன்கிழமை அன்று தான் மிகவும் பொறுமையாக இருந்ததாகவும், திமுகவினரின் செயல்பாடுகள் எல்லை மீறவே அப்படியொரு உத்தரவை பிறப்பித்ததாகவும் தனபால் விளக்கம் அளித்துள்ளார்.
உத்தரவை திரும்பப்பெற சபாநாயகர் மறுக்கவே, திமுக, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையை வெளிநடப்பு செய்து அவைக்கு வெளியே திமுக நடத்திய மாதிரி சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications