ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்- பா.ஜ.க. போட்டியிடும் மனநிலையில் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா போட்டியிடும் மனநிலையில் இல்லை என்று கருதுவதாக அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி. மகேந்திரன் போட்டியிடுகிறார். ஆனால் தி.மு.க, காங்கிரஸ், மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாரதிய ஜனதா கட்சியும் இத்தேர்தலில் போட்டியிடாது எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் மனநிலையில் பாரதிய ஜனதா இல்லை; மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் இத்தேர்தல் நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கையும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications