தமிழக பட்ஜெட்... ஓ.பி.எஸ். தலைமையில் அமைச்சரவை கூடி ஆலோசனை!
சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பான முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழக சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் பிப்ரவரி 17-ந் தேதி கவர்னர் ரோசையாஉரையோடு தொடங்கியது. பின்னர், அந்த சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, கடந்த மாதம் 6-ந் தேதி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு, கவர்னர் உரை பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் 2015-2016-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இம்மாதம் இறுதியில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்படும். பின்னர் ஒவ்வொரு துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படும்.
இந்த சூழ்நிலையில், நேற்று மாலை 3 மணியளாவில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 40 நிமிடங்கள் நடந்த அந்தக் கூட்டத்தில், நடப்பாண்டு பட்ஜெட் பற்றி ஆலோசனை நடந்ததாக தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தூர்பாண்டியன் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.