நிபந்தனைக்கு மேல் நிபந்தனை... அடுத்தது என்ன?... அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி தீவிர ஆலோசனை!.
அதிமுக கோஷ்டிகள் இணைப்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை: அதிமுகவின் எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும் இணைவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனையைத் தொடங்கியுள்ளார்.
அதிமுகவின் சின்னம் பறிபோய் விடும் என்ற பயத்தால் டிடிவி.தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அணியும் ஒன்று கூடலாம் என திட்டமிட்டது. ஆனால் ஓபிஎஸ் அணி 2 நிபந்தனைகள் விதித்ததோடு சசிகலா, டிடிவி தினகரனிடம் ராஜினாமா கடிதம் வாங்கியே தீர வேண்டும் என்று கடுமை காட்டியது.

ஓபிஎஸ் அணியின் புதுப்புது நிபந்தனைகளால் திணறிப் போயுள்ளனர் எடப்பாடி அணியினர். இந்நிலையில் கட்சியினரின் கருத்தை கேட்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிமுக தலைமை வந்தார்.
முதல்வர் எடப்பாடி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் முதல் கூட்டம் இது. இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், ராஜ்யசபா உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிகாரம் முதல்வர் எடப்பாட்டிக்கே உள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று எம்எல்ஏக்கள் கூட்டமும் நடைபெறும் என கூறப்படுகிறது.
மேலும் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி கருத்து கேட்டு வருகிறார். எடப்பாடி கூட்டியுள்ள இந்த கூட்டத்தின் முடிவில் முக்கிய முடிவு வெளியாகும் என்பதால் அதிமுக அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications