இலங்கை வசம் உள்ள 103 படகுகள், 4 மீனவர்ளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் - ஜெ.,
சென்னை: இலங்கை சிறையில் உள்ள 4 புதுக்கோட்டை மீனவர்களையும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 103 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி மீன்பிடிக்க சென்றவர்களில் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கடந்த 8ம் தேதி சிறைபிடிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாகக் கூறியுள்ள முதலமைச்சர், மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யும் இலங்கை அரசின் போக்கு பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்படையச் செய்வதாகக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் இலங்கை சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ள 4 புதுகோட்டை மீனவர்களையும், தமிழக மீனவர்களின் 103 படகுகளையும் மீட்க பிரதமர் மோடி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தமது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.