கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் - சித்தராமைய்யாவுக்கு ஜெ.,கடிதம்
சென்னை: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக வெடித்துள்ள கலவரங்களில் இருந்து தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு பெங்களூர் நகரின் பல இடங்களில் கலவரம் வெடித்தது. இன்று காலை முதலே அரங்கேறிய வன்முறை சம்பவங்களால் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
ஒரே நேரத்தில் கேபிஎன் நிறுவனத்திற்குச் சொந்தமான தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட 38 சொகுசு பேருந்துகள் உள்பட 52 ஆம்னி பஸ்களை தீக்கிரையாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்படுகின்றன. இதனால், பெங்களூரு முழுவதும் பதற்ற நிலை உண்டாகியுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமைய்யாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழக மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் வருத்தம் அளிப்பதாகவும், தமிழர்களின் உடைமைகளையும், சொத்துக்களையும் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.