மழை நீரை வெளியேற்றி விட்டோம்.. துரிதமாக செயல்படுகிறோம்.. முதல்வர் பளிச் பேட்டி!
சென்னையில் மழைநீர் தேங்காமல் அரசு துரிதமாக செயல்பட்டதன் மூலம் தாழ்வான பகுதிகளில் இருந்து மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையில் தாழ்வான பகுதிகளில் இருந்து மழை நீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அரசு துரிதகதியில் செயல்பட்டதன் விளைவாக சென்னை மக்கள் இன்னல்களுக்கு ஆளாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் மழை பாதிப்புகளை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
சென்னை மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து போர்க்கால அடிப்படையில் பணியாற்றியதால் தாழ்வான பகுதிகளில் இருந்த நீர் அகற்றப்பட்டு விட்டது. மேலும் மழை பாதிப்புகளை பார்வையிடும் போது பொதுமக்கள் இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றார்கள்.
ஜெயலலிதா கனமழை வருகின்ற போது தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை வடிகால் வசதி கொண்டு அகற்றுவதற்காக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி முதற்கட்டமாக ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 386 கி.மீ வடிகால் கட்ட உத்தரவிடப்பட்டு 30 கி.மீட்டருக்கு வடிகால் கட்டப்பட்டுள்ளது.
3 நாட்களில் பெய்த மழையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்த இடங்களில் வடிகால் வசதி செய்ய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். 2015ம் ஆண்டு கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் இந்த மழையின் போது மழைநீர் தேங்காமல் வெளியேற்றப்பட்டுள்ளது. 31ம் தேதி 14 செ.மீ மழை, 1ம் தேதி 4 செ.மீ, நேற்று 18 செ.மீ என 3 நாட்களில் 36 செ.மீ மழை பெய்திருந்தாலும் சென்னை மாநகரில் எங்கும் தண்ணீர் தேங்காமல் அரசு துரித கதியில் செயல்பட்டு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, மும்பையில் பெய்த மழையின் போது எந்த அளவிற்கு மழை தேங்கி இருந்தது. ஆனால் அதிமுக அரசு சிறந்த வடிகால்களை ஏற்படுத்தியதால் சென்னையில் மழை நீர் வெளியேற்றப்பட்டு மக்கள் தண்ணீர் இல்லாமல் மக்கள் நிம்மதியாக உள்ளனர்.
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. கரையோரத்தில் இருந்தவர்களுக்கு மாற்று இடம் அளிக்கப்பட்டுள்ளது, இதற்கான ஆதாரங்கள் உள்ளன. அடையாறு கால்வாய் பகுதி தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.