மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல்.. திருநாவுக்கரசர் VS கோஷ்டி தலைவர்கள்!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், டெல்லிக்கு சென்றுள்ளார். கோஷ்டி தலைவர்களின் எதிர் கானத்திற்கு நடுவேயும் அவர், பல்வேறு உறுப்பினர்கள் நியமனத்திற்கு தேதி குறிக்க சென்றுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மாவட்ட தலைவர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டதோடு சரி. மாநில நிர்வாகிகள் ஒன்னரை வருடமாக நியமிக்கப்படவில்லை.
இது தொடர்பாக, இரண்டு முறை தயாரிக்கப்பட்ட பட்டியலுக்கு ராகுல் அப்ரூவல் தரவில்லை. திருப்பி அனுப்பினார்.
டெல்லி விரைந்த திருநாவுக்கரசு
இந்த நிலையில், பொருளாளர், துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட மாநில பொறுப்புகளுக்கான நியமன பட்டியலுக்கு ராகுலின் ஒப்புதலை பெறுவதற்காக டெல்லிக்கு விரைந்துள்ளார் திருநாவுக்கரசு. இதனையறிந்த கோஷ்டி தலைவர்கள், " கட்சியின் மூத்த தலைவர்கள் யாருடனும் கலந்தாலோசிக்காமலே மாநில நிர்வாகிகள் பட்டியலை தயாரித்துள்ளார்.
புகார்கள்
இதன் பின்னணியில் அவரது உறவினர்கள் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர். அதனால் பட்டியலுக்கு ஒப்புதல் தருவதற்கு முன்பு, பட்டியல் குறித்து விசாரித்துவிட்டே அப்ரூவல் தர வேண்டும்" என ராகுல்காந்தியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பதில்களுடன் பறந்தார்
கோஷ்டி தலைவர்கள், இப்படியெல்லாம் குழப்பத்தையும் பிரச்சனையையும் கிளப்புவார்கள் என உணர்ந்துள்ள திருநாவுக்கரசர், அதற்கான பதில்களுடன்தான் டெல்லி பறந்துள்ளார். இந்த முறை கோஷ்டி தலைவர்களின் நினைப்பு பலிக்காது. பட்டியலுக்கு அப்ரூவல் வாங்கிக்கொண்டே திரும்புவார் !" என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
கோஷ்டி சண்டை
காங்கிரசில் கோஷ்டி சண்டை எப்போது ஒழிந்திருக்கிறது? இப்போது மட்டும் ஒழிவதற்கு என்று மற்றொரு பக்கம் நமட்டு சிரிப்போடு இந்த விவகாரங்களை பற்றி வர்ணிக்கிறார்கள் பிற கட்சியினர். இம்முறை திருநாவுக்கரசரின் அரசியல் அனுபவம் இதையெல்லாம் சரிகட்டுமா பார்ப்போம்.