தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்ட ஜி.கே.வாசன் பகீரத முயற்சி!
சென்னை: தமிழகத்தில் கலகலத்துப் போயிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு எப்படியாவது புத்துயிரூட்டுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு டெல்லியில் லாபிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறாராம் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்.
ஜி.கே.வாசனைப் பொறுத்தவரையில் ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தன்னை காங்கிரஸ் மேலிடம் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஜி.கே.வாசனின் இந்த நம்பிக்கைக்கு எப்போதே ராகுல் காந்தி வேட்டு வைத்துவிட்டார்.
தனிக்கட்சி கோஷங்கள்
இதனால் ராகுல் காந்தியுடன் மோதல் போக்கையே வாசன் கடைபிடித்து வருகிறார். இதன் ஒரு கட்டமாகத்தான் வாசன் ஆதரவாளர்கள் அவ்வப்போது தனிக்கட்சி தொடங்கலாம்.. தனிக்கட்சி தொடங்கலாம் என்று கோஷம் போட்டு வருகின்றனர்.
லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுப்பு
பின்னர் விட்டால் லோக்சபா தேர்தல் வேட்பாளராக அறிவித்துவிடுவார்களோ என்று கருதி, முன்னரே தாம் லோக்சபா தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்றும் அறிவித்தார் ஜி.கே.வாசன். ஆனாலும் இதையும் சோனியா, ராகுல் ஆகியோர் ரசிக்கவில்லை.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு குறி
இந்த நிலையில் எப்படியாவது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்றுவது என்பதில் ப.சிதம்பரமும் ஜி.கே.வாசனும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பின்னணியில் சோனியா, ராகுலின் நல்லெண்ணத்தை மீண்டும் பெறும் வகையில் ஜி.கே.வாசன் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
சிலை திறப்பு முயற்சி
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரது சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு சோனியா, ராகுலை எப்படியும் அழைத்துவந்துவிடுவது என்று டெல்லியில் கதியாக கிடக்கிறாராம் வாசன்.
போராட்ட வியூகம்
அத்துடன் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை அடுத்தடுத்து அறிவித்தால் காங்கிரஸ் கட்சியின் அடையாளத்தைக் காப்பாற்றலாம் என்பதும் வாசனின் கணக்கு. சோனியா, ராகுலை சிலை திறப்பு விழாவுக்கு அழைக்கும் போதே இந்த போராட்ட திட்டத்துக்கும் அனுமதி வாங்கி வந்துவிட்டால் போராட்டத்துக்கு மேல் போராட்டம் நடத்தி ஊடக வெளிச்சத்தில் இருக்கலாம் என்பதும் ஜி.கே.வாசனின் கணக்காம்.
எடுபடுமா வாசன் விவேகம்?
ஏற்கெனவே சோனியா, ராகுலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் கலகக் குரல் வெடித்துள்ள நிலையில் வாசனின் இந்த வியூகம் எடுபடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.