ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் தமிழக காங். கண்டன ஆர்ப்பாட்டம்
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.
மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் தடைவிதிப்பதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் ஏழை-எளிய மக்கள் வங்கிகளில் காத்துக் கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கருப்புப் பணத்தை ஓழிப்பதாக கூறி மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கிய மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறி வந்த மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நெருக்கடி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருவதால் அதுபற்றி உரிய ஆய்வு நடத்தப்படும் என்று கூறியிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.