தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்வதெல்லாம் ஒரு வழியா - பாலகிருஷ்ணன் பொளேர்!
அதிமுக எம்பிகள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று சொல்வதெல்லாம் ஒரு வழியா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிகள் கூண்டோடு தற்கொலை செய்து கொள்வோம் என்று நவநீதகிருஷ்ணன் கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்வதால் ஒரு பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுவிடுமா என்று கேட்டுள்ளார். மத்திய அரசை பணிய வைக்க பல வழிகள் உள்ளது அதை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்வதெல்லாம் ஒரு வழியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தீர்ப்பு நிறைவேற்றப்படாவிட்டால் அதிமுக எம்பிகள் ராஜினாமா செய்வதை விட தற்கொலை செய்து கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். நவநீதகிருஷ்ணனின் இந்த பேச்சுக்கு தலைவர்கள் பலரும் இதுவும் ஒரு நாடகமே என்று கூறி வருகின்றனர்.
நவநீதகிருஷ்ணன் எம்பியின் ஆவேச பேச்சு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது : நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிகள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று சொல்கிறார். தற்கொலை செய்து கொண்டு சாவதால் ஒரு பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுவிடும் என்று நான் நினைக்கவில்லை.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி அந்த மாநில எம்பிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது. ஆனால் காவிரிக்காக இத்தனை நாட்களாக தமிழக எம்பிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நாங்கள் சொன்னோம் முதலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொடுக்கச் சொன்னோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதை விட்டுவிட்டு இவர் ஏன் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்கிறார். அப்படியானால் தமிழகத்திற்கு துரோகம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நீடிக்க வேண்டும் என்று சொல்ல வருகிறார்களா, இவர்கள் தற்கொலை செய்து கொள்வதால் என்ன நடக்கப் போகிறது.
மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுக்கட்டும், அதனை நிறைவேற்றவில்லை என்றால் எம்பிகள் ராஜினாமா செய்யட்டும். அதுவும் முடியாவிட்டால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் திரண்டு சென்று பிரதமர் வீட்டை முற்றுகையிடுவோம்.
அவை விட்டுவிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என்று சொல்வதெல்லாம் ஒரு வழியா. நவநீதகிருஷ்ணன் பேசுவது ஆவேசக் குரலே இல்லை. ஒரு அரசியல்வாதி எம்பி மத்திய அரசை பணிய வைக்க நிறைய வழிகள் இருக்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுக்கிறோம் என்று சொன்னாலே பிரதமருக்கு அது ஒரு ஷாக்காக தான் இருக்கும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்தால் ஆளும் கட்சியை மட்டுமே வைத்து எப்படி ஆட்சி நடத்த முடியும் என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.