ஏப்ரல் 22 முதல் வாகனச் சோதனைகள் கடுமையாக்கப்படும்: ராஜேஷ் லக்கானி தகவல்
சென்னை: தமிழக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இதன் பின்னர் வாகனச் சோதனைகள் கடுமையாக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்லும் போது அதற்குரிய ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக, மருத்துவமனைத் தேவையோ அல்லது வணிகம் செய்யவோ இருந்தால் அதற்கான சான்றுகளை வைத்திருப்பது முக்கியம்.

ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழே பறிமுதல் செய்யப்படும் பணத்தை 24 மணி நேரத்துக்குள் உரியவர்களிடம் ஒப்படைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் அவர்களது ரொக்கப் பணம் திரும்ப வழங்கப்படும்.
5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் இருந்தால் 3 நாட்களுக்குள் உரிய ஆவணங்கள் அளிக்கப்படும் பட்சத்தில் பணத்தை திருப்பி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரை பணம் வைத்திருந்தால் அதனை யாரும் பறிமுதல் செய்ய மாட்டார்கள். இந்தத் தொகையை ரூ.1 லட்சம் வரை உயர்த்துவதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியைக் கோர முடிவு செய்துள்ளோம்
சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22- ஆம் தேதி தொடங்குகிறது. அப்போது முதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும். இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனங்களிலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் சென்றால் அது பறிமுதல் செய்யப்படும்.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 363 வாக்காளர் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வண்ண வாக்காளர் அடையாள அட்டை கோரி, இந்த மையங்களில் இரண்டு நாள்களில் மட்டும் 10 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று லக்கானி கூறினார்.












Click it and Unblock the Notifications