போலி ஆவணம் மூலம் கடன் வழங்கிய வழக்கு: இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறை
சென்னை: போலியான ஆவணங்கள் மூலம் தனியார் நிறுவனத்திற்கு கடன் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியன் வங்கி தலைவராக கோபாலகிருஷ்ணன் பதவி வகித்தபோது தனியார் நிறுவனமான கிரண் இன்னோவேஷன் நிறுவனத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் கடன் வழங்கியது. இந்த கடன் வழங்க முறையான அனுமதியை வங்கி அதிகாரிகள் பெறவில்லை.

இதன்மூலம், இந்தியன் வங்கிக்கு ரூ.5.51 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையிலுள்ள சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி கந்தகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அத் தீர்ப்பில் முறைகேட்டில் ஈடுபட்ட இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் வழக்கில் தொடர்புடைய மூன்று வங்கி ஊழியர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை மற்றும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதே போல் கடன் பெற்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்த 2 பேருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.32,500 அபராதமும் விதிக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications