மந்தைவெளி மேற்கு வட்ட சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் பெயர்..அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி
சென்னை மந்தவெளியில் உள்ள மேற்கு வட்டச் சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று பெயர் சூட்டப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்த் திரையுலகின பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவை ஒட்டி, அவர் வாழ்ந்த வீடு அமைந்த சென்னை மந்தவெளி மேற்கு வட்டச் சாலைக்கு 'டி.எம்.சவுந்தரராஜன் சாலை' என்ற பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூட்டுகிறார். இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் முதல்வருக்கு டி.எம்.சவுந்தரராஜன் மகன் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் தலைசிறந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் 1923 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி பிறந்தார். டிஎம்எஸ் என்று தமிழ் திரைப்பட பாடல் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் டி.எம்.சவுந்தரராஜன்.
தனது 60 ஆண்டுகால இசைப் பயணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி, மெல்லிசைப் பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளார். இவரது முருக பக்திப் பாடல்கள் மிகவும் பிரசித்தம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். பல நாடுகளுக்கும் சென்று கச்சேரிகள் செய்துள்ளார்.
தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுக்காக சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். அந்தந்த நடிகர்களின் குரலுக்கு ஏற்றபடி குரலை மாற்றி பாடல்களைப் பாடுவது அவரது சிறப்புத்திறமையாகும். அவரது தமிழ் உச்சரிப்பும், பிசிறு தட்டாத குரல் வளமும் அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச்சென்றன.
பட்டினத்தார், அருணகிரிநாதர், அகத்தியர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். 2002ஆம் ஆண்டில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டார். தன் பாடல்கள் மூலம் இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் டிஎம்எஸ் 91வது வயதில் 2013 ஆம் ஆண்டு மறைந்தார்.
இந்நிலையில், டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவை ஒட்டி, சென்னை மந்தவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்த மேற்கு வட்டச் சாலைக்கு 'டி.எம்.சவுந்தரராஜன் சாலை' என்ற பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூட்டுகிறார். வரும் 24 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் இந்தப் பெயரை சூட்டுகிறார்.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில், டி.எம்.சவுந்தரராஜனின் 100-வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் அவர் வசித்து வந்த வீடு அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச்சாலையின் பெயரை டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் பரிந்துரை செய்துள்ளார். பரிந்துரையை பரிசீலித்து, மந்தைவெளி மேற்கு வட்டச்சாலையின் பெயரை டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.எம்.சவுந்தரராஜன் பெயர் சூட்டப்படுவதற்கு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு டி.எம்.சவுந்தரராஜன் மகன் நன்றி தெரிவித்துள்ளார். தங்களுடைய வீடு உள்ள பகுதியின் சாலைக்கு தனது தந்தையாரின் பெயர் சூட்டப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.