போடு வெடிய.. இனி கேரளா, கர்நாடகா போக வேணாம்! சென்னையில் Wonderla - தமிழ்நாடு அரசின் முக்கிய முடிவு
சென்னை: இந்தியாவின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றாக உள்ள வொண்டர் லாவை சென்னையில் தொடங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பல்வேறு காரணங்களால் அது தடைபட்டு உள்ள நிலையில், மீண்டும் அதை திறக்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விடுமுறை பயணம், சுற்றுலா என்றாலே அதில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு முக்கிய இடம் இருக்கும். சென்னையில் எம்ஜிஎம், விஜிபி போன்ற பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைந்து இருக்கின்றன. இதற்கு ஏராளமான மக்கள் தினந்தோறும் சென்றுவந்தாலும் வொண்டர் லாவுக்கு சென்று மகிழ வேண்டும் என்பது பலரது விருப்பம்.

இந்திய அளவில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றாக சொல்லப்படும் வொண்டர் லா கேரள மாநிலம் கொச்சி, கர்நாடக தலைநகர்
பெங்களூரு, தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அமைந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து கொச்சி, பெங்களூரு, மைசூருக்கு சுற்றுலா செல்பவர்களில் பலர் நிச்சயம் வொண்டர் லாவுக்கு செல்வது வழக்கம். சிலர் வொண்டர் லா செல்ல வேண்டும் என்பவதற்காகவே சென்னையில் இருந்து கொச்சி, பெங்களூருவுக்கு சென்று வருகிறார்கள்.
தென் இந்தியாவின் மூன்று மாநிலங்களில் அமைந்து உள்ள வொண்டர் லா, தமிழ்நாட்டில் இல்லையே என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் இருந்தது. இதனை போக்கும் வகையில்தான் சென்னையில் வொண்டர் லாவை அமைக்க அந்த நிறுவனம் முடிவெடுத்தது. அத்துடன் ஒடிசா மாநிலத்திலும் வொண்டர் லாவை தொடங்க திட்டமிட்டது. இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகளும் தொடங்கின.

இதுகுறித்து கடந்த ஆண்டு தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த வொண்டர் லாவின் நிர்வாக இயக்குநர் சித்தலாபில்லி, "சென்னை மற்றும் ஒடிசாவில் வொண்டர் லாவை அமைக்க்க இரு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளோம். நல்ல முடிவுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சென்னையில் 2 முதல் 3 ஆண்டுகளில் இது முழுமையாக கட்டப்படும். இதற்காக ரூ.300 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது." என்றார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியிலும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு ரூ.500 கோடியில் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே சென்னை ஓ.எம்.ஆர் பகுதியில் 60 ஏக்கர் நிலத்தை வொண்டர் லா ஹாலிடேஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2022 ஆம் ஆண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரி சிக்கல் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் இந்த பணியை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் மாநில அரசுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தது. இதுகுறித்து சித்தலாபில்லி தெரிவிக்கையில், "கொச்சியில் உள்ள வொண்டர் லாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து 20% பேர் வருகிறார்கள். பெங்களூருவில் உள்ள வொண்டர் லாவுக்கு வருபவர்களில் 10% தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். எனவே இங்கும் அதற்கான தேவை உள்ளது." என்று கூறினார்.
சென்னையில் வொண்டர் லா வருமா என்ற கேள்வி சுற்றுலா பயணிகள் உட்பட பலரிடம் எழுந்த நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதற்கான விரிவான திட்டம் வகுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications