ஸ்கேனில் சிசுவின் பாலினத்தை மறைக்க மென்பொருள்... தமிழக அரசு தீவிரம்!
பெண் சிசு கொலைகளை தடுக்கும் விதமாக குழந்தையின் பாலினத்தை ஸ்கேனில் மறைப்பதற்கான மென்பொருள் தயாரிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: பெண் சிசு கொலைகளை தடுக்கும் விதமாக குழந்தையின் பாலினத்தை ஸ்கேனில் மறைப்பதற்கான மென்பொருள் தயாரிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடியுடன் இணைந்து அரசு இந்த மென்பொருளை உருவாக்கி வருவதாக தமிழக குடும்பநலத்துறை இயக்குநர் மருத்துவர் பானு கூறியுள்ளார்.
இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது சட்டப்படி குற்றமாகும். பெண் சிசு கொலைகளை தடுப்பதற்காக இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண் குழந்தையை கருவிலேயே கண்டறிந்து, கரு கலைப்பு செய்யும் சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுவதாக மத்திய சுகாதாரத்துறைக்கு புகார் கிடைத்தது. அதன்பேரில் மத்திய சுகாதாரத்துறை சார்பு செயலரும், கண்காணிப்பு குழு ஒருங்கிணைப்பாளருமான அஜய்குமார் தலைமையிலான குழுவினர் கடந்த வாரத்தில் திருவண்ணாமலையில் திடீர் சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலையில் சட்டவிரோத கருக்கலைப்பு
திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள 3 தனியார் ஸ்கேன் சென்டர், திருவூடல் தெருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் விசாரணை நடத்தி 4 இடங்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த மருத்துவர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காண நடவடிக்கை
இதே போன்று சட்டவிரோத கருகொலைகளில் ஈடுபட்ட 126 மையங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எனினும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக குழந்தையின் பாலினத்தை கண்டறிவது சுலபமாகி வருகிறது. எனவே தொழில்நுட்ப ரீதியாக இதற்கு தீர்வு காணும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
பாலினத்தை மறைக்க மென்பொருள்
இந்தியாவிலேயே முதல் முறையாக குழந்தையின் பாலினத்தை கண்டறிவதை தடுக்க புதிய மென்பொருளை தமிழக அரசு தயாரித்து வருகிறது. ஸ்கேன் செய்யும் போது குழந்தையின் பிறப்புறுப்பு மட்டும் தெரியாத வகையில் மாஸ்க் செய்வதற்கான மென்பொருள் தயாரிக்கப்பட்டு வருவதாக தமிழக குடும்பநலத்துறை இயக்குநர் மருத்துவர் பானு கூறியுள்ளார்.
அரசு புதிய முயற்சி
சென்னை ஐஐடியுடன் இணைந்து அரசு உருவாக்கி வரும் இந்த மென்பொருள் மூலம் குழந்தையின் பாலினத்தை மட்டும் ஸ்கேனின் போதே மாஸ்க் செய்யும் சாப்ட்வேர் ஸ்கேன் மெஷின்களில் பொருத்தப்பட்ட பின்னரே ஸ்கேன் மையங்களுக்கு அனுப்பப்படும் என்று பானு தெரிவித்துள்ளார்.
விரைவில் செயல்பாட்டுக்கு வரும்
மென்பொருள் பரிசோதனையில் இருப்பதாகவும் இது வெற்றி தரும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள ஸ்கேன் மெஷின்களில் இது பொருத்தப்படும் என்றும் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் அனைத்து ஸ்கேன் மெஷின்களிலும் இது புதிதாக சேர்க்கப்பட்டு அதன் பின்னர் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.