நடவடிக்கை எடுத்திருவாரோ? பீதியில் கிரிஜா வைத்தியநாதனிடம் இருந்து லஞ்ச ஒழிப்பு துறையை பறித்த எடப்பாடி
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வசம் கூடுதலாக இருந்த லஞ்ச ஒழிப்புத் துறைத் தலைவர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை பறிக்கப்பட்டு உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த டைரியின் அடிப்படையில் சேகர் ரெட்டியிடம் பணம் லஞ்சமாக பெற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் பட்டியலை தமிழக அரசுக்கு வருமான வரித்துறை பரிந்துரை செய்தது. இந்த பட்டியலில் உள்ளவர்கள் மீது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நடவடிக்கை எடுப்பார் என்று பலரும் கருதினர்.
லஞ்ச ஒழிப்பு துறை ஆணையராக உள்ள தலைமைச் செயலாளருக்கே அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மீதான லஞ்சு மற்றும் ஊழல் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் உள்ளது. இதனால் தன்னுடைய பணியில் துளியும் சமரம் செய்யாத ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், 300 கோடி ரூபாய் வரை சேகர் ரெட்டியிடம் லஞ்சமாக பெற்று மணல் குவாரி டெண்டருக்கு உதவியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையாளராகவும் இருக்கும் தலைமைச்செயலளார் கிரிஜா வைத்தியநாதனிடம் இருந்து அந்தப் பதவி பறிக்கப்பட்டு உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பே இந்த மாற்றம் வந்துவிட்டதாகவும், ஆனால் இணையதளத்தில் இந்தத் தகவல் இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றும் தலைமைச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிவிப்பின்றி துறை மாற்றம்
நிரஞ்சன் மார்டி லஞ்ச ஒழிப்பு துறை ஆணையராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டாலும் நேற்றுதான் பதவியேற்றார். வருமான வரித்துறையால் சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதியாக ஊழல் ஒழிப்புத் துறையை தனக்கு சாதகமாக இருக்கும் நிரஞ்சன் மார்டியிடம் அளித்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி அரசு.

மார்டியை ஓரம் கட்டிய ஜெ.
2011ல் தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் நிரஞ்சன் மார்டி. அதே ஆண்டில் சிறு, குறு. நடுத்தரத் தொழில்கள் துறையின் செயலாளர். 2012ல் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறைச் செயலாளர். 2013 மார்ச்சில் உள்துறைச் செயலாளர். பிறகு புள்ளியியல் மற்றும் பொருளியல் துறையின் ஆணையாளர். ஆனால் திடீரென நிரஞ்சன் மார்டியை ஓரம் கட்டினார் அப்போதைய முதல்வார் ஜெயலலிதா.

எடப்பாடியால் ஏற்றம்
தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வராக எடப்பாஅடி பழனிச்சாமி பொறுப்பேற்றதும் உள்துறை செயலர் பதவி மூலம் அதிகார மையத்திற்கு வந்துள்ளார் மார்டி. இதன் பின்னணியில் அவர் முதல்வருக்கு விசுவாசமாக இருப்பார் என்று கருதுவதே காரணமாக சொல்லப்படுகிறது.

நடவடிக்கை வருமா?
லோக் அயுக்தா கொண்டு வராமல் உள்துறையிடம் ஊழல் கண்காணிப்புத் துறையை கொடுப்பதில் எந்தப் பயனும் இல்லை என்கின்றன கோட்டை வட்டாரங்கள். எனவே வருமான வரி துறை பட்டியலில் உள்ள ஊழல் அரசியல்வாதி மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு தற்போது நிரஞ்சன் மார்டியின் கையில் உள்ளது.












Click it and Unblock the Notifications